தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் 'நீ எங்கே என் அன்பே' (அனாமிகா). இந்த படத்தில் நயன்தாரா, பசுபதி, ஹர்ஷவர்தன் ராணே மற்றும் வைபவ் உள்ளிட்டோர் நடித்தனர்.
ஆனால், இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், இந்த படம் இந்தியில் வெளியான 'கஹானி' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'நீ எங்கே என் அன்பே' படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சேகர் கம்முலா "அனாமிகா படத்தை இயக்க வேண்டாம் என்று முதலில் நினைத்தேன்.
பின்னர், பெண்களை மையமாக கொண்ட படத்தை இயக்க வேண்டும் என்று விரும்பியதால் இதனை இயக்கினேன். அந்த நேரத்தில் தனக்கு நல்ல கதை இல்லாததால், பாலிவுட் படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தேன்.
இதனால், இப்படத்தில் நயன்தாரா போன்ற முன்னணி நடிகை நடித்தால் நல்ல வரவேற்பை பெறும் என நம்பினேன். ஆனால், இப்படம் சரியாக அமையவில்லை. இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்திருக்கக்கூடாது. அவரை தேர்ந்தெடுத்தது தவறான முடிவு" என்று தெரிவித்துள்ளார். சேகர் கம்முலா தற்போது தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.