டவ்தே’ புயல் நேற்று முன்தினம் இரவு குஜராத்தில் கரையைக் கடந்தது. இந்த புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. 

மரங்கள் சாய்ந்ததால், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர், விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினர். புயல் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  பல இடங்களில் வெள்ளம் வடியாததால் பெரும்பாலானோர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். 

இந்நிலையில், புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி இன்று குஜராத் சென்றார்.

காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத் மாநிலம் பவ்நகர் சென்ற பிரதமர் மோடி, மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி ஆய்வு செய்தார். பிரதமருடன் குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் இருந்தார்.

இந்நிலையில் டவ்தே புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கவும் காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் புயல் பாதித்த குஜராத் மாநிலத்தில், நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி விடுவிக்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.