`நான் ஏன் என் காரில் மாஸ்க் அணியவேண்டும் ? நான் கணவருக்கு முத்தமிட வேண்டும் என்றால் என்ன செய்வது?' என காவல்துறையினரிடன் கேட்டார். பின்னர் அவர்கள் இருவரும் தர்யா பஞ் பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் இந்த வேளையில் டெல்லியில் மாஸ்க் அணியாமல் காரில் பயணித்த தம்பதி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள படேல் நகர் பகுதியில் பங்கஜ் மற்றும் அபா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய காரில் முகக்கவசம் அணியாமல் பயணித்துள்ளனர். இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். தடுத்து நிறுத்திய பின், அபா காவல்துறையினருடன் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் செய்த பெண்
டெல்லி காவல்துறையினர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள காணொளியில், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தப் பெண், தான் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் வெற்றிபெற்றுள்ளதாகக் கூறுகிறார். அதற்கு காவல்துறை அதிகாரியோ, அப்படி வெற்றி பெற்றிருக்கும் நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் எனக் கூறுகிறார்.
ஆனால் அந்தப் பெண்ணோ,`நான் ஏன் என் காரில் பயணிக்கும்போது மாஸ்க் அணியவேண்டும் ? நான் கணவருக்கு முத்தமிட வேண்டும் என்றால் எப்படி முத்தம் கொடுப்பது?' என்று போலீஸாரிடம் கேட்கிறார். பின்னர், அவர்கள் இருவரும் தர்யா பஞ் பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காவல்துறையினர், தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்தத் தம்பதி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்யபட்டனர்.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முதல், டெல்லி அரசு, தனி நபர் காரில் பயணம் செய்தாலும் முகக்கவசம் அணியவேண்டும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கார் ஒரு பொது இடமாகக் கருதப்படும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
Commuters with face mask | முகக்கவசம்
AP Photo/Bikas Das
தேசிய தலைநகரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வார இறுதி நாள்களில் ஊரடங்கு பிறப்பித்துள்ளார். மேலும் மால்கள், திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்படும் என அறிவித்துள்ளார் .
தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கொரோனோ வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.