நாடு முழுவதும் பல நகரங்களில் மாடுகள் வளர்ப்பது பெரும் சிக்கலான வி‌ஷயமாக மாறியுள்ளது. மாடுகளை கட்டி வைக்க இடம் பற்றாக்குறை, மேய்ச்சல் நிலம் இல்லாமை போன்றவற்றால் பலர் மாடுகளை சாலைகளிலேயே விட்டுவிடுகின்றனர். மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு சாலையில் திரியும் மாடுகளை பராமரிக்க அரசு பல்வேறு முயற்சிகளையும், மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாநகராட்சி பகுதியின் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் சில மாடுகள் சாணம் போட்டுள்ளன. இதன் காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம் இனியும் தொடரும் என்று மாட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.