மும்பை மாநகரின் முக்கிய அடையாளங்களில் உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் உள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா பங்களாவும் ஒன்று. மிகவும் விலை மதிப்பு மிக்க தனியார் சொத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி. இந்த பங்களாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.

தனது மனைவி நீட்டா மற்றும் 3 குழந்தைகள் ஆனந்த், ஆகாஷ் மற்றும் இஷா ஆகியோருடன் உள்ள புகைப்படங்களையும் அவர்வெளியிட்டுள்ளார். இஷா திருமணமாகி அவர் கணவர் ஆனந்த் பிரமளுடன் வோர்லி பங்களாவில் தற்போது வசிக்கிறார்.

விக்கிப்பீடியா வெளியிட்டுள்ள தகவலின்படி 27 தளங்களைக் கொண்ட இந்த பங்களா, இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்தபடியாக மிகவும் அதிக மதிப்பு கொண்ட பங்களாவாகக் கருதப்படுகிறது. அட்லான்டிக் பெருங்கடல் அருகில் அமைந்துள்ள ஒரு தீவின் பெயர் இந்த பங்களாவுக்கு (அன்டிலியா) வைக்கப்பட்டுள்ளது.

27 தளங்களைக் கொண்டிருந்தாலும் இதன் உயரத்துக்கு இணையாக சாதாரண அடுக்குமாடிக் குடியிருப்புகள் 60 தளங்களை கொண்டதாக கட்ட முடியும். அந்த அளவுக்கு ஒவ்வொரு தளத்தின் உயரமும் மிக அதிகம். இதன் மேல்தளத்தில் 3 ஹெலிபேட் (ஹெலிகாப்டர் இறங்குதளம்) உள்ளது. இங்கு 128 கார்களை நிறுத்தும் வசதி உள்ளது. 9 விரைவு லிப்ட்கள் உள்ளன.

இவை தவிர 50 பேர் பார்க்கும் வகையிலான திரையரங்கம், மேற்கூரையில் 3 தொங்கும் தோட்டம், நீச்சல் குளம், ஸ்பா, ஹெல்த் சென்டர், கோயில், பனி அறை மற்றும் 24 மணி நேரமும் பணியாற்ற வசதியாக 600 பணியாளர்கள் தங்க இட வசதி உள்ளிட்ட அனைத்தும் இந்த பங்களாவில் உள்ளது. சூரியன் மற்றும் தாமரை வடிவமைப்புகளைக் கொண்டதாக கட்டப்பட்ட இந்த பங்களா 8 ரிக்டர் அளவு வரையிலான பூகம்பத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு இந்தபங்களா கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. முகேஷ் அம்பானி குடும்பத்தினர் 2012-ல் இந்த பங்களாவுக்கு குடியேறினர்.

இந்த பங்களா இடம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உருவாயின. அனாதை குழந்தைகள் நலனுக்காக வக்பு வாரியத்துக்கு சொந்தமான இந்த இடத்தை விற்று அதில் கிடைத்த தொகை மூலம் ஏழைக் குழந்தைகள் படிப்புக்கு உதவி செய்ய முடிவு செய்யப்பட்டது. அப்போது இந்த நில விற்பனையை வக்பு அமைச்சர் நவாப் மாலிக் மற்றும் வருவாய்த்துறை எதிர்ப்பு தெரிவித்தது. பல்வேறு சட்ட சிக்கலுக்கு இடையே அம்பானி ரூ.1.6 கோடிதொகையை செலுத்தி தடையில்லா சான்று பெற்றார். இதில் 3 ஹெலிபேட் அமைக்க கடற்படை எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல சுற்றுச் சூழல் அமைச்சகமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் அனுமதிபெறப்பட்டது.

2011-ம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், இந்த பங்களாவை அதிர்ஷ்டமில்லாத பங்களா எனக் குறிப்பிட்டு, இதனால் இந்த பங்களாவில் முகேஷ் அம்பானிகுடியேறவில்லை என தெரிவித்திருந்தது. 2012-ம் ஆண்டில் இந்த பங்களாவுக்கு குடிபெயர்ந்த அவர் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் நான்காமிடத்துக்கு உயர்ந்தார். தற்போது ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.