அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜங், தன் மாமாவிற்கு மரண தண்டனை விதித்து சுட்டுக் கொன்றது உள்ளிட்ட பல விடயங்களை வெளிப்படையாக கூறிய தகவல், தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ள புத்தகமொன்றில் இடம்பெற்ற டொனால்ட் ட்ரம்பின் நேரகாணல் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அமெரிக்காவில் முதல் முதலாக பரவ ஆரம்பித்த போதே, அதன் வீரியத்தையும், விபரீதத்தையும், ட்ரம்ப் நன்றாக தெரிந்து வைத்திருந்தார் என அந்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காற்றில் பரவக் கூடியது என்பதும், மிகவும் மோசமான அழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதும், டெனால்ட் ட்ரம்புக்கு நன்றாகத் தெரியும்.
ஆனாலும், வெளியில் பேசும்போது, அதை அவர் காட்டிக் கொள்ளவில்லை. மிகவும் சாதாரண விடயம் போல், அதை வெளிப்படுத்தினார் எனவும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த, 2018 இல், கிழக்காசிய நாடான வட கொரியாவின் ஜனாதிபதி கிம் யொங் உன்னை, சிங்கப்பூரில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சந்தித்தார்.
முதல் சந்திப்பின் போதே, கிம் யொங் பற்றிய சில விடயங்கள், ட்ரம்பிடம் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாக, டொனால்ட் ட்ரம்ப்பே தெரிவித்தாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தான் நினைத்ததை விட, பல விடயங்களில் கிம் யொங், கில்லாடியாக இருந்ததாக, ட்ரம்ப் ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கியமான விடயங்களைப் பற்றி, தன்னிடம் கிம் யொங் மனம் திறந்து பேசியதாக டிரம்ப் குறிப்பிட்டார் என அந்த புத்தகத்திலும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, தனக்கு எதிராக செயல்பட்ட, மாமாவுக்கு, மரண தண்டனை கொடுத்து சுட்டுக் கொன்றது எப்படி என்பதை, மிகவும் விளக்கமாக டிரம்பிடம், யொங் தெரிவித்துள்ளார்.
வட கொரியா போன்ற நாடுகளின் சவால்களை முறியடிக்கும் வகையில், அணு ஆயுத அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், இதற்கு முன், அமெரிக்காவிடம் இல்லாத ஒரு ஆயுதமாக இது இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார் எனவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.