சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி சேர்ந்த ஆனந்தகுமார், தனியார் வங்கிகளில் ஏ.டிஎம்.களில் பணம் நிரப்பும் பணி செய்யும் ஊழியராக இருந்து வந்துள்ளார். இவர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூர் கைலாஷ்நகர் காந்திநகரில் உள்ள தனது மாமா செந்தில்குமார் வீட்டிற்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு வந்துள்ளார். கொரோனோ ஊரடங்கு காரணமாக ஆனந்தகுமார், தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மாமா வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். வீட்டிலிருந்த நேரத்தில் பொழுதுபோக்காக இன்ஸ்டாகிராமில் முகம் கூட தெரியாத பெண் பெயரிலான ஐடி உடன் பேசிப் பழகியுள்ளார்.
இந்த தொடர் பழக்கம் காதலாகியுள்ளது. உண்மையில் ஆனந்தகுமாரிடம் பேசிப் பழகியது ஒரு பெண் தானா? என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தகுமாரின் காதலை நிராகரித்து, இன்ஸ்டாகிராம் கணக்கை எதிர்நபர் பிளாக் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆனந்தகுமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவருக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். நேற்று உறவினர் வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் அளித்த தகவலையடுத்து, திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானவேலன் மற்றும் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்தகுமாரின் செல்போனைக் கொண்டு, அவரை ஏமாற்றிய நபர், அவர் உண்மையிலேயே பெண்தானா?
பெண் கணக்கில் தொடர்பு கொண்ட ஆணா? தற்கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தினம் செல்போனில் யூ-ட்யூப் உள்ளிட்டவற்றைப் பார்த்து 14 வயது சிறுவன் வக்கிரத்துடன் அணுகி, 9 வயது சிறுமியை கொன்ற நிலையில் இப்போது இன்ஸ்டாகிராம் இன்ஸ்டன்ட் காதலால் வாலிபர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.