புதிய அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, புதிய அமைச்சரவை பதவியேற்புக்கான ஏற்பாடுகளை இடதுசாரி முன்னணி தொடங்கியது. ஆனால் பதவியேற்பு விழா தள்ளிப்போனது. 

அதேசமயம், கேரள மாநில முதல் மந்திரியாக பினராயி விஜயன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இடதுசாரி ஜனநாயக முன்னணியின் புதிய அரசு மே 20-ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக பினராயி விஜயன் அறிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக அதிகபட்சமாக 500 பேர் வரை மட்டுமே பங்கேற்பார்கள் என்றும் கூறினார்.
 
அதன்படி, திருவனந்தபுரம் சென்ட்ரல் மைதானத்தில், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. கேரளாவின் முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப்பிரமாணம், ரகசியகாப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்பின்னர் 20 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். புதிதாக பதவியேற்ற முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரள காங்கிரஸ் (எம்), ஜனதா தளம் (எஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 இடங்கள் சுழற்சி முறையில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.