டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பந்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவ்வளவு எளிதாக யாரும் லெவனில் ஆடி விட முடியாது, அதே போல் அணிக்குள் நுழைந்தால் சொதப்பினாலும் தொடர் வாய்ப்புகள் கிடைக்கும்.

தோனி ஒழித்த வீரர்களில் தமிழகத்தின் பாபா அபராஜித்தைக் குறிப்பிடலாம். 2 சீசன்கள் சிஎஸ்கே மற்றும் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐபிஎல் அணியில் பாபா அபராஜித்தைத் தேர்வு செய்து ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கவில்லை. 2008-ல் சிஎஸ்கேவில் ஆடிய பழனி அமர்நாத் என்ற வேகப்பந்து வீச்சாளர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இதே போல் இன்னும் நிறைய குறிப்பிட முடியும். முரளி விஜய், அஸ்வின் ஆகியோருக்கும் போதிய வாய்ப்புகள் இல்லை.

தற்போது எதற்காக ராபின் உத்தப்பாவை ஏலம் எடுத்தனர் என்றே தெரியவில்லை. ஒரு போட்டியில் கூட அவரை லெவனில் எடுக்கவில்லை, மாறாக பேட்டிங் மறந்த ராயுடுவை வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அதே போல்தான் டிவைன் பிராவோவின் நிலையும் ஒரு போட்டியில் இருப்பார், ஆனால் பேட்டிங் பவுலிங் கிடைக்காது அடுத்த போட்டியில் இருக்க மாட்டார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் பெஞ்சில் உள்ள வீரர்களையும் மதிக்கும் விதமாக அவர்களையும் தோனி பாராட்டியுள்ளார்.

நேற்று ஆட்டம் முடிந்து தோனி  கூறியதாவது:

பேட்டிங் பிரமாதமாக உள்ளது, அதற்காக பவுலிங் மோசம் என்று அர்த்தமல்ல. டெல்லி பிட்ச் ஆச்சரியகரமாக நன்றாக இருந்தது. பனிப்பொழிவு இல்லை. தொடக்கக் கூட்டணி அபாரம்.

கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் என்ன பிரச்னை என்பதை விரைவில் கண்டுபிடித்து தீர்வு காண்பதே. எவ்வளவு விரைவாக பிரச்னைகளைத் தீர்க்கிறோமோ அவ்வளவு நல்லது.

கடந்த ஆண்டு 5-6 மாதங்களுக்கு கிரிக்கெட் பக்கம் நாங்கள் தலை வைத்துப் படுக்கவில்லை. இதுவும் கடினம்தானே. நீண்ட தனிமைப்படுத்துதல், இப்படி இப்படி ஏகப்பட்ட காரணிகள் உள்ளன.

தொகுத்துக் கூற வேண்டுமெனில் இந்த ஆண்டு வீரர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஆடிவருகின்ரனர். கடந்த 8-10 ஆண்டுகளில் பார்த்திருந்தால் நாங்கள் அணியில் பெரிய மாற்றங்களெல்லாம் செய்வதில்லை. வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் இருக்கும் வீரர்களையும் பாராட்டுகிறோம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் நம்பிக்கை வையுங்கள். நீங்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

ஓய்வறைச் சூழ்நிலையை ஆரோக்கியமாக வைத்திருத்தல் முக்கியம். விளையாடாத வீரர்களுக்கும் நாங்கள் இதற்கும் சேர்த்துக் கூட கூடுதல் பெருமையைச் சேர்க்கிறோம்.

இவ்வாறு கூறினார் தோனி, சிஎஸ்கே தற்போது 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.