அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை திறக்கப்பட்டன.

இதன் காரணமாக மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பாக புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியா, நியூயோர்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குகொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் விரைவில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியலாம் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

கடந்த நான்கு நாட்களாக அமெரிக்காவில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்ற நிலையில் அமெரிக்காவில் இதுவரை 30 இலட்சத்து 41 ஆயிரத்து 950 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.