புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து ஹொங்கொங் விடயத்தில் பிரித்தானியா தலையிடக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவிற்கான சீன தூதுவர், மூன்று மில்லியன் ஹொங்கொங்கர்களுக்கு குடியுரிமைக்கான பாதையை பிரித்தானியா வழங்குவது 1984 கூட்டு பிரகடனத்தின் மீறல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹொங்கொங்கில் பெய்ஜிங் புதிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து கடுமையான தலையீடு மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை பிரித்தானியா தெரிவித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை சீனா விரும்பினாலும், சீனாவை ஒரு விரோத நாடாக மாற்ற விரும்பினால், அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பெய்ஜிங்குடனான இருதரப்பு உறவுகளில் ஒரு “பொற்காலம்” என்று 2015 ஆம் ஆண்டில், முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் குறிப்பிட்டதையும் சீனத் தூதுவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.