மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 18 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியது.
மேலும் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இராணுவம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் இட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 18 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
யங்கூன், தாவெய், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் ஆளும் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் உட்பட 800க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.