பாடசாலையில் தொடர் கிண்டல் கேலிக்கு இலக்கான ஆசிய வம்சாவளி சிறுமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்போது நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி சிறுமி உமா குப்தா(14), பாடசாலையில் தொடர்ந்து கேலி, கிண்டலுக்கு இலக்காகியுள்ளார்.
இதனாலையே அவருக்கு தற்கொலை எண்ணம் இருந்து வந்துள்ளது. மார்ச் 2ம் திகதி 2019-ல் பெற்றோர் அனுமதியுடன் விருந்து ஒன்றுக்கு சென்ற உமா குப்தா,
சம்பவத்தன்று கிழக்கு டிட்ஸ்பரி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
பாடசாலையில் தாம் அனுபவித்துவந்த கேலி கிண்டல்களை தாங்கிக்கொள்ள முடியாமல், மனமுடைந்தே காணப்பட்ட உமா, தமக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை ரகசியமாக கைப்பட பதிவு செய்தும் வந்துள்ளார்.
மார்ச் மாதத்தில், அவருக்கு தற்கொலை எண்ணம் இருந்ததை தமது ரகசிய பதிவேட்டில் குறிப்பிட்டிருந்தார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமது குடும்பம், நண்பர்களை தாம் மிக அதிகமாக நேசிப்பதாக அக்டோபர் 2018-ல் குறிப்பிட்டிருந்த உமா,
சிறு தொல்லைகளால் மனமுடைந்து போவது முறையல்ல எனவும் பதிவு செய்துள்ளார். அதே வேளை, 2018 செப்டம்பரில் தமது தூரத்து சொந்தத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரமும் அவரை மனதளவில் பாதித்ததாக கூறப்படுகிறது.
இது அவரது நடவடிக்கைகளில் தென்படவே, பெற்றோர் அவரை கவனமுடன் கண்காணித்தும் வந்துள்ளனர்.
2018 டிசம்பர் மாதம், தலையில் பலத்த காயமுடன் தெருவோரம் விழுந்து கிடந்த அவரை பொலிசார் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
அப்போதும், தாம் செத்துவிட வேண்டும் என உமா கதறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து அவருக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு, அவர் தற்போது தற்கொலை செய்துகொள்ளும் அபாயத்தில் இல்லை என மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.
மார்ச் 2ம் திகதி, விருந்துக்கு செல்லும் முன்னர், உமா மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாகவும், விருந்து முடிவடைந்த பின்னர் பெற்றோர் வந்து அழைத்துச் செல்லவும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், விருந்து நிகழ்ச்சியின் நடுவே, உமாவின் நடவடிக்கை மாறியதாகவும், அவர் சமையலறையிலும் கழிவறையிலும் சென்று அழுது கொண்டே இருந்ததாகவும் சிலர் சாட்சியப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, பெற்றோர் வரும் வரையில் காத்திருக்காமல், உமா தனியாகவே, கிழக்கு டிட்ஸ்பரி ரயில் நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
இரவு சுமார் 10 மணியளவில் உமா குப்தா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உமாவின் மறைவுக்கு பின்னர், தங்கள் குடும்பம் மொத்தமாக மாறிப்போனதாக கூறும் அவரது பெற்றோர், மொத்த மகிழ்ச்சியையும் தொலைத்துவிட்டோம் என்கிறார்கள்.
உமா குப்தா பயின்ற பாடசாலையில், தற்போது கேலி, கிண்டலுக்கு உள்ளாகும் மாணவர்கள் புகார் செய்யும் வகையில் ரகசிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.