அமெரிக்காவில் நபர் ஒருவர் இளவரசர் ஹரி-மேகன் மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய பிறகு இளவரசர் ஹரி-மேகன் ஜோடி அமெரிக்காவுக்குச் சென்றனர், அங்கு அவர்கள் ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான Tyler Perry-யிடமிருந்து 18 மில்லியன் டொலர் மாளிகையை வாடகைக்கு எடுத்தனர்.
ஆனால் பின்னர் Santa Barbara கவுண்டியில் சொந்த வீட்டை வாங்கினர். இந்த மாளிகையின் விலை 14.5 மில்லியன் டொலர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இளவரசர் ஹாரி மற்றும் மேகனின் மாளிகைக்குள் நபர் ஒருவர் இரண்டு முறை அத்துமீறி நுழைந்தார் என உள்ளூர் சட்ட அமலாக்க வட்டாரத்தை மேற்கோள் காட்டி TMZ தெரிவித்துள்ளது.
TMZ வலைத்தளத்தின்படி, கடந்த டிசம்பரில், ஓஹியோவிலிருந்து வந்த 37 வயதான Nickolas Brooks என்பவர் கிறிஸ்துமஸ் அன்று இளவரசர் ஹரி-மேகன் மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்றார்.
பின்னர் அவர் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார். பொலிசார் அவரை எச்சரித்து அனுப்பியதாக TMZ தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த நபர் திரும்பி மாளிகைக்குள் நுழைய முயன்றார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு, அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவர் கொள்ளையடிக்கவோ அல்லது இளவரசரை தாக்க திட்டமிட்டிருந்தாரா அல்லது அவர் வெறுமனே வேடிக்கை காட்ட இவ்வாறு செய்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எனினும், இந்த பிரச்சினையை அமைதியாக கையாள இளவரசர் ஹரி-மேகன் ஜோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓப்ரா உடனான நேர்காணலின் போது, இளவரசர் ஹரி, அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகியதை தொடர்ந்து பாதுகாப்பு இல்லாதது அவரது மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும் என்பதை வெளிப்படுத்தினார்.
பிரித்தானியா அரச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் பெருநகர காவல்துறையினரால் பாதுகாக்கப்படுகிறார்கள், ஆனால் இளவரசர் ஹரி-மேகன் ஜோடி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து பதவி விலகிய பின்னர் வட அமெரிக்காவுக்குச் சென்றபின், அரண்மனை அவர்களுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை நீக்கியது என்று இளவரசர் கூறினார்.
அரச குடும்பமும் அவரை நிதி ரீதியாக கைவிட்டு விட்டதாகவும், பாதுகாப்பிற்காக செலுத்த போதுமான பணம் தேவைபடுவதால் Netflix மற்றும் Spotify நிறுவனங்களுடன் லாபகரமான ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாகவும் ஹரி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.