மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி-சிவப்பிரியங்கா தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே உள்ள தங்களது வீட்டிற்கு வந்த இந்த தம்பதி, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறி நேற்று முன் தினம் நள்ளிரவு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அந்தக் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததாகவும், எனவே இந்த குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் தகவல் கூறினர்.

போலீசார் உடனே குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட உத்தப்பநாயக்கனூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் அளித்தனர்.

இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார், சின்னச்சாமி- சிவப்பிரியங்கா தம்பதியிடம் பெண் குழந்தையின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.