புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்த இந்திராணி-முத்துவீரன் தம்பதிக்கு கடந்த டிசம்பர் 19-ந்தேதி சுகப்பிரசவம் மூலம் குறைமாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 875 கிராம் இருந்ததால் குழந்தை பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டது.
குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் வெண்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு நுரையீரல் வளர்ச்சிக்காக சர்பேக்டண்ட் மருந்தும் நுரையீரலுக்கு செலுத்தப்பட்டது. ஒரு வார கால தீவிர சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் சுவாசிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழந்தைக்கு குழாய் மூலம் சிறிதளவு பால் கொடுக்கப்பட்டது. குழந்தைக்கு கிருமிதொற்றுக்கான சிகிச்சையும், மஞ்சள் காமாலைக்கான போட்டோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் முழுவதும் சரியான பிறகு தாய்ப்பால் பாலாடை மூலம் வழங்கப்பட்டு பிறகு நேரடியாக தாய்ப்பால் வழங்கப்பட்டது.
குழந்தையின் எடை அதிகரிக்க கங்காரு தாய் கவனிப்பு முறை சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 48 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் எடை 1.1 கிலோவாக அதிகரித்தது. குறைமாத குழந்தைகளுக்கான ஆர்.ஓ.பி. கண் பரிசோதனை ஓ.ஏ.இ. எனப்படும் செவித்திறன் பரிசோதனை மற்றும் தலைக்கான ஸ்கேன் பரிசோதனை ஆகியவையும் செய்யப்பட்டு குழந்தை நல்ல முறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறைவான எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் பூவதி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.