அரியாங்குப்பம் அருந்ததிபுரம் ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மகன் ராஜசேகர் (வயது 28). கூலித் தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை.

பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று முன்தினம் கிருஷ்ணராஜ் தனது மனைவியுடன் திருவண்ணாமலை சென்றுவிட்டார். ராஜசேகர் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்டார். அப்போது தனது பாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவர் எடுத்து வருவதற்குள் ராஜசேகர் திடீரென மயக்கமடைந்து கீழே சாய்ந்து விழுந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.