சென்னை: உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் இயக்குநர் ரஞ்சித் (25). இவர், சோழிங்கநல்லூரில் வசித்து வருகிறார். சென்னை அடுத்த அக்கரை பகுதியில், இயக்குநர் ரஞ்சித் வெப் சீரியல் ஷூட்டிங் நடத்தி வந்தார். இதில், சுவேதா (25) என்ற இளம்பெண் நடித்து வந்தார். இந்நிலையில், ரஞ்சித், சுவேதாவிடம் தன்னை காதலிக்க வற்புறுத்தியதோடு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை சுவேதா பலமுறை கண்டித்து வந்தார். அதனை பொருட்படுத்தாமல், தொடர்ந்து சுவேதாவுக்கு ரஞ்சித் தொல்லை கொடுத்து வந்தார். இதனால், மனமுடைந்த சுவேதா நேற்று முன்தினம் மாலை கானத்தூர் காவல் நிலையில் புகார் அளித்தார். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் வேலு, ரஞ்சித் மற்றும் அவரது உதவியாளர்கள் கார்த்திக் (26), ரியாஸ் (23) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில், ரஞ்சித், சுவேதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து ரஞ்சித்தை கைது செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.