பிரெக்சிட் மாற்றக்காலம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், பிரித்தானியாவும் சுவிட்சர்லாந்தும் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளன. பிரெக்சிட்டுக்குப் பின் இரு நாட்டைச் சேர்ந்த சில குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும் தற்காலிகமாக மற்ற நாட்டில் பணி புரிவதை அனுமதிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பிரித்தானிய தகவல் தொடர்பு துறை நிபுணர்கள், பொறியாளர்கள் முதலான சிலர் மட்டும் சுவிட்சர்லாந்தில் 90 நாட்களுக்கு பணி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சுவிஸ் நாட்டவர்கள் பிரித்தானியாவில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும், 12 மாதங்களுக்கு பணி செய்ய அனுமதியளிக்கப்படுகிறது.
தடையில்லா வர்த்தகம் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன் சுவிட்சர்லாந்தில் பெற்ற தொழிற்கல்வி சான்றிதழ்கள் பிரித்தானியாவில் செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் இந்த ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும், அது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.