தெலுங்கானா மாநிலம் ஜதராபாத் விகாரி காலனி பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 46) தொழில் அதிபர். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு மகன் சாய் கிருஷ்ணா, மகள் சாய்ந்தி உள்ளனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணேஷ் தனது குடும்பத்தினருடன் புதுவைக்கு சுற்றுலாவுக்கு வந்தார். நேற்று சுற்றி பார்ப்பதற்காக விழுப்புரம் அருகே உள்ள கோட்டக்குப்பம் சந்திராயன் கடற்கரைக்கு கணேஷ் குடும்பத்துடன் வந்தார்.
அப்போது கடலில் குளிப்பதற்கு கணேஷ், அவரது மனைவி அருணா, மகன் சாய் கிருஷ்ணா ஆகியோர் இறங்கினர். மகள் சாய்ந்தி கடற்கரையில் அமர்ந்து இருந்தார்.
அவர்கள் 3 பேரும் ஆனந்தமாக குளித்த வேளையில் திடீரென ராட்சத அலை வந்தது கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரையும் கடல் அலை இழுத்து சென்றது. இதைப்பார்த்த சாய்ந்தி அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்த மீனவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் கடலுக்குள் குதித்து 3 பேரையும் காப்பாற்றினர். அதில் கணேசுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதையடுத்து புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கணேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
தெலுங்கானாவில் இருந்து புதுவைக்கு சுற்றுலாவுக்கு வந்த தொழிலதிபர் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பத்துடன் சுற்றுலா வந்த தொழில் அதிபர் கடல் அலையில் சிக்கி பலி
