தேனி: தேனியில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் கற்பகவள்ளி என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுரேஷ், கற்பகவள்ளியை திருமணம் செய்த நாள் முதலே கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவரது நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி கற்பகவள்ளியை கொடுமைப்படுத்தி வந்த சுரேஷ், மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 6 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை வயிற்றிலும், மார்பக பகுதியிலும் சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தியதுடன் தாலி கயிற்றை பிடித்து இறுக்கி கயிற்றை நெரித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த கற்பகவள்ளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுரேஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், இத்தகைய குற்றங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் மரண தண்டனை வழங்குவதையே வலியுறுத்திக்கிறது என்று குறிப்பிட்டு குற்றவாளி சுரேஷை சாகும்வரை தூக்கிலிட வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து, கருச்சிதைவு செய்ததற்காக மேலும் 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூபாய் 10,000 அபராதமும் விதித்தார். நீதிபதி அப்துல் காதர், அளித்த தீர்ப்பு நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.