தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியில் கட்டிட வளாகத்தில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தானே மாவட்டம் அம்பர்நாத் மேற்கு சங்கர் ஹைட்ஸ் என்ற குடியிருப்பு பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் சுமேத் லோகர். இவன் நேற்று கட்டிட வளாகத்தில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு நின்ற 3 தெருநாய்கள் சிறுவன் சுமேத் லோகரை விரட்டியது. இதனால் பயந்து போன சிறுவன் அங்கிருந்து ஓடிய போது கால் இடறி கீழே விழுந்தான். விரட்டி வந்த தெருநாய்கள் கீழே விழுந்து கிடந்த சிறுவனை கடித்து குதறியது.

இதனால் வலி தாங்க முடியாத சிறுவன் அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நாய்களை விரட்டி அடித்தனர். பின்னர் சிறுவனை மீட்டனர். அவனுக்கு முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. சிறுவனை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்றனர். மேலும் அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து நடவடிக்கை எடுக்குமாறு அம்பர்நாத் நகராட்சிக்கு கவுன்சிலர் உமேஷ் பாட்டீல் உள்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.