மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 864 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,104 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. 15,738 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 138 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினமும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. எனினும் தென்மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்தில் தான் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதற்கு காரணம் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தாதது தான் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாத நிலை தொடர்கிறது. மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகம் உள்ள கூரைக்குண்டு கிராமம் மட்டுமே நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி வளாகத்தில் நோய்த்தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏனெனில் கலெக்டர் அலுவலக வளாகம் உள்ள பகுதியிலேயே நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாததால் அப்பகுதியில் நோய் பாதிப்பு ஏற்பட்டு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை, கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே இம்மாதிரியான நிலை நீடித்தால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் சுகாதாரத்துறையினர் எந்த அளவில் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள் என்பது தெளிவாக தெரியும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கிராமப்பகுதிகளில் தொடர்ந்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.