இந்தியாவில் தாய் மற்றும் மகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பிப்ராலி தொகுதியில் வியாழக்கிழமை முக்யமந்திரி சாமுஹிக் விவாக யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெற்ற வெகுஜன திருமண விழாவில், பெண் மற்றும் அவரது மகள் இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 63 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

திருமணம் செய்து கொண்ட அந்த பெண் பெலி தேவி. இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்தவர், அவர் தற்போது தனது கணவரின் தம்பி ஜெகதீஷை மணந்துள்ளார். பெலி தேவிக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இளைய மகள் இந்துவைத் தவிர அனைத்து குழந்தைகளுக்கும் திருமணமாகி தங்கள் சொந்த குடும்பங்களுடன் வாழ்வதால், பெலி தேவி தனது வாழ்நாள் முழுவதையும் தனது மைத்துனருடன் வாழ முடிவு செய்து திருமணம் செய்துள்ளார். இவரது மகள் இந்துவும், இதே வெகுஜன திருமண விழாவில் திருமணம் செய்து கொண்டார்.

இதுபற்றி பேசிய பெலிதேவி கூறுகையில், 55 வயதான ஜெகதீஷ் இன்னும் திருமணமாகாதவர். எனது இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் ஏற்கனவே திருமணமானவர்கள். எனது இளைய மகளின் திருமணத்துடன், எனது கணவரின் தம்பியை திருமணம் செய்ய முடிவு செய்தேன். என் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.