நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை அடுத்த மகிழடியை சேர்ந்தவர் ரசூல்ராஜ் (வயது 58). மதபோதகர்.

இவருக்கு எப்சி பாய் (52) என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இதில் முதலாவது மகள், அவரது கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

இவர்களது 8 மாத கைக் குழந்தையான குயின்சி தாத்தா ரசூல்ராஜின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். ரசூல்ராஜின் 4-வது மகள் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவரை பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சிவா என்ற சிவசங்கரன் (25) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது பெற்றோரிடம் சிவா பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ரசூல்ராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சிவா இன்று அதிகாலை அரிவாள், சுத்தியல், பெட்ரோல் கேனுடன் ரசூல்ராஜின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு எப்சிபாய் மற்றும் அவர்களது பேத்தி குயின்சி ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். உடனே சிவா அரிவாளால் 2 பேரையும் சரமாரி வெட்டி உள்ளார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு நடைபயிற்சிக்கு சென்ற ரசூல்ராஜ் வீட்டிற்கு ஓடி வந்தார்.

அப்போது அவரையும் அரிவாளால் சிவா சரமாரி வெட்டினார். பின்னர் 3 பேரையும் வீட்டிற்குள் அடைத்து வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். ஆனால் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் சிவா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த 3 பேரையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே கைக்குழந்தை குயின்சி பரிதாபமாக இறந்தாள். ரசூல்ராஜ், எப்சிபாய் ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிவாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் ஒருதலைக்காதலால் சிவா, குழந்தை உள்பட 3 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.