திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுதாகரன். இவரது மகன் சசிகுமார் (வயது37). இவரது மனைவி பிரியா (32) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகன் பிரஜித்(10) 6-ம் வகுப்பும், மகள் ப்ரிதிகா(8) 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

சசிகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். அப்போது முதல் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரிடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

இதையடுத்து இரவு தூங்கி கொண்டிருந்த போது தனது கணவன் மற்றும் 2 குழந்தைகள் மீது பிரியா பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

இதில் அவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மற்றும் குழந்தைகள் கை மற்றும் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் வலியால் அலறியபடி கூச்சலிட்டனர்.

இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது தீயில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதபமாக இறந்தார். குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் பிரியா தனது கணவன் தான் என் மீதும் குழந்தைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார் என்று கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் நடத்தையில் சந்தேகப்பட்டதால் பிரியாவே கணவனை எரித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.