மதுரையில் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் அந்த பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் ஒருவர் முதல்-அமைச்சர் காரை வழிமறித்து மனுவை கொடுக்க முயன்றார்.
உடனே அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அந்த பெண்ணை சுற்றிவளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது. போலீசார் அந்த பெண்ணை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது.
விசாரணையில் அவருக்கு மாநகராட்சி சுகாதார பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வரும் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதுதொடர்பான புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் முதல்-அமைச்சர் காரை வழிமறித்து புகார் கொடுக்க முயன்றதும் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். இதற்கிடையே இன்னொரு பெண்ணிடமும் அந்த சுகாதார ஆய்வாளர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக விளக்குத்தூண் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.