சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் ரவி (வயது 46). இவர் நேற்று மாதவரம் சீதாபதி தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் மாதவரம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார். செல்போனில் அழைப்பு வந்ததால் அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 செல்போன் திருடர்கள், ரவியிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். அப்போது இதைகண்ட அந்த வழியாக சென்ற மாதவரம் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்ட்லின் ரமேஷ், மோட்டார் சைக்கிளில் சென்ற திருடர்களை விரட்டி பின்தொடர்ந்து சென்றார்.
வழிப்பறி திருடர்கள் மாதவரம் சாஸ்திரி நகர் சாலையில் நுழைந்து திரும்பியபோது, சினிமா பாணியில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் துரத்தி சென்று அவர்களை மடக்கி பிடித்தார். இதையடுத்து, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், தப்பிச்சென்றார். அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தடுமாறி கீழே விழுந்தார். இருப்பினும், சுதாரித்து எழுந்து, வண்டியை ஓட்டி வந்த திருடனை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், பிடிபட்டவர் சென்னை வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த அருண் (20) என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்படி, கெல்லீஸ் ரோட்டில் பதுங்கியிருந்த தனதுகூட்டாளியான விக்னேஷ் (19) மற்றும் அவருடன் இருந்த செல்போன் திருடர்களான நவீன் குமார்(23), முகேஷ் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்புகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேரையும் கைது செய்த மாதவரம் போலீசார், அவர்களிலிருந்து 8 செல்போன்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், செல்போன் திருடன் அருண்குமாரை சப்-இன்ஸ்பெக்டர் ஆண்ட்லின் ரமேஷ் மடக்கி பிடிக்கும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. ‘நிஜ ஹீரோ’ போல் துரத்தி சென்று சப்- இன்ஸ்பெக்டர், திருடர்களை மடக்கி பிடித்த காட்சிகளை சமூகவலைத்தளங்களில் கண்ட பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
சினிமா பாணியில் செல்போன் திருடனை துரத்தி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்
