டுவிட்டரில் தனது பெயரில் ஏராளமான போலி கணக்குகள் இருப்பதை அறிந்த நடிகை நிவேதா பெத்துராஜ் வேதனை தெரிவித்துள்ளார். ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் கைவசம் ஜகஜ்ஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இவருக்கு தமிழை போல் தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது பெயரில் போலி கணக்குகள் செயல்பட்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: "நான் டுவிட்டரில் @nivetha_tweets என்ற கணக்கை மட்டுமே நிர்வகித்து வருகிறேன். எனது பெயரில் பல போலியான டுவிட்டர் கணக்குகள் இருப்பதால் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். டுவிட்டர் நிறுவனம் போலியான கணக்குகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கொரோனா அச்சுறுத்தலால் அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம் மேலும், எனது கணக்கை அதிகாரபூர்வமாக்குவதற்கும் சிறிது காலம் எடுக்கும். ஆகையால் இந்தக் கணக்கை மட்டும் பின்தொடருங்கள் என ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.