கொரோனா வைரஸின் 2ஆவது அலை வருமென எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதி பாடசாலைகள் – கல்லூரிகளை திறப்பதா ? என தமிழக அரசுக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாடசாலைகள் திறப்பு அறிவிப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் பொங்கல் விடுமுறை முடிந்து, 2021 ஜனவரி இறுதியில், அப்போதைய சூழ்நிலைகளை முழுவதுமாக ஆய்வு செய்து, பாடசாலைகளைத் திறக்கலாம் என்ற கருத்தை முன்வைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பெற்றோர்கள் – ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி, மாற்று அறிவிப்பை வெளியிட்டு மக்களின் மனப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.