தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள கிஷான் நகர் பகுதியை சார்ந்தவர் ஷியாமளா(65). தன்னுடைய மகன்களுடன் வசிக்கும் ஷியாமளா இரண்டு மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஷியாமளா சென்றிருந்தார்.

ஊரடங்கு நடைமுறை காரணமாக அவரால் சொந்த ஊர் திரும்ப இயலவில்லை. ஊரடங்கு நடைமுறை தளர்த்தப்பட்டு இருக்கும் தற்போதைய நிலையில் ரயிலில் கரீம்நகர் வந்தடைந்த ஷியாமளா வீட்டுக்கு சென்றார். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா தொற்று இருப்பதை காரணமாக காண்பித்து, உனக்கும் கொரோனா தொற்று இருக்கலாம். எனவே வீட்டுக்குள் வரக்கூடாது என்று ஷியாமளாவை வீட்டுக்குள் அனுமதிக்க அவரது மகன்கள் மறுத்துவிட்டனர்.




மகன்களின் செயல் காரணமாக எங்கும் செல்ல இயலாமல் வீதியில் வசிக்கும் ஷியாமளா உணவு, குடிநீர் ஆகியவை கிடைக்காமல் திண்டாடி வருகிறார். அவருடைய நிலையை பார்த்த உள்ளூர் மக்கள் உணவு வழங்கி உதவி வருகின்றனர்.

கொரோனா தொற்று தன்னுடைய தாய்க்கு ஏற்பட்டிருக்கும் என்று கருதும் அவருடைய மகன்கள், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தவிர்த்து, அவரை புறக்கணித்து இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.