திமுக-வின் மாநில செய்தித்தொடர்பு இணைசெயலாளர் பிரசன்னா அவர்களின் மனைவி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறந்தநாளன்று அவர் மனைவி செய்த இச்செயல் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிறந்தநாளை விமர்சனமாக கொண்டாட முடியாத காரணத்தாலும், குடும்ப பிரச்சனை காரணமாகவும் அவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திராவிட முன்னேற்ற கழகத்தில், செய்தித்தொடர்பு இணைசெயலாளராகவும், வழக்கறிஞராகவும் இருப்பவர் தான் தமிழன் பிரசன்னா(41), இவருக்கு நதியா(35) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னை, எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்குப் பகுதியில், மாமனாருடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்றளவில் நதியாவின் அறை நீண்ட நேரம் திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிரசன்னா காலை 10 மணியளவில், அறையை திறந்து பார்த்து போது, மின்விசிறியில் தொங்கிய நிலையில் நதியா இருந்துள்ளார். இதையடுத்து அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டுசென்றுள்ளனர். நதியாவை சோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். இதைத்தொடர்ந்து நதியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து, காவல் துறையினர் அவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நதியாவின் இறப்பிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

"திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னா அவர்களது மனைவி நதியா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். தம்பியின் திருமணநிகழ்வில் பங்கெடுத்து, இருவரையும் வாழ்த்திய நினைவுகளை எண்ணும்போது பெரும்மனவலியை கூட்டுகிறது.

ஆற்ற முடியாதப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பி PrasannaTamilan, அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்!" என்று கூறியுள்ளார்.