ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி வீரர்கள் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றனர்.  2வது டெஸ்ட் போட்டி கடந்த 7ந்தேதி ஹராரேவில் தொடங்கியது.  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பட் (2) ரன்களில் வெளியேறினார்.

ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபித் அலி அதிரடியாக விளையாடினார்.  அவர் 29 பவுண்டரிகளை விளாசினார்.  215 (407 பந்துகள்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.  ஜிம்பாப்வேயில் அவர் அடித்த முதல் இரட்டை சதம் என்ற பெருமையுடன், அந்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் யூனிஸ் கானின் அதிகபட்ச ஸ்கோரை முறியடித்து சாதனை படைத்து உள்ளார்.

இம்ரான் ஆட்டமிழந்த பின்னர் அபித்துடன் இணைந்து விளையாடிய அசார் அலியும் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.  அவர் 126 (240 பந்துகள் 17 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.  அதன்பின்னர் கேப்டன் பாபர் ஆசம் (2), ஆலம் (5), சஜித் கான் (20), முகமது ரிஸ்வான் (21), ஹசன் அலி (0) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால், பின்னர் வந்த நவுமன் அலி சிக்சர்களாக விளாசினார்.  அவர் 97 ரன்கள் (104 பந்துகள் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) அடித்தது அணிக்கு கூடுதல் வலு சேர்த்தது.  அவர் ஆட்டமிழந்தவுடன் ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டது.  பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 510 ரன்கள் சேர்த்திருந்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது.  நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 60.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்த்து பாலோ-ஆன் ஆனது.

இதனால், 2வது இன்னிங்சையும் ஜிம்பாப்வே விளையாடியது.  இதிலும் அந்த அணி திணறியது.  3வது நாள் ஆட்ட நேர முடிவில், 63 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 220 ரன்கள் எடுத்து இருந்தது.

அந்த அணியின் ஜாங்வி (31) மற்றும் முஜாராபானி (0) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இந்நிலையில், இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் ஜாங்வி 37 ரன்கள் எடுத்திருந்தபொழுது, ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முஜாராபானி 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.  68 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஜிம்பாப்வே 231 ரன்கள் சேர்த்திருந்தது.  இதனால், பாகிஸ்தான் அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  அதனுடன் 2-0 என்ற புள்ளி கணக்கில் தொடரையும் கைப்பற்றி உள்ளது.