இலங்கை மற்றும் சுற்றுலா பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப் பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி போட்டியின் மூன்றாவது நாளான இன்று 7 விக்கெட்டுக்களை இழந்து 493 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 118 ஓட்டங்களையும் மற்றும் லஹிரு திரிமான்ன 140 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
மேலும், ஓசத பெர்ணான்டோ 81 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் டஸ்கின் அஹமட் 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 83 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டுள்ளது.
அவ்வணி சார்பாக தமீம் இக்பால் அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் ப்ரவீன் ஜயவிக்ரம 6 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.
இதன் மூலம் முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய 5 ஆவது இலங்கை வீரர் என்ற சாதனையை ப்ரவீன் படைத்துள்ளார்.
சுரங்க லக்மால் மற்றும் ரமேஷ் மெந்திஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
இதற்கமைய பங்களாதேஸ் அணியை விட இலங்கை அணி 242 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.
ப்ரவீனின் சுழலில் சிக்கிய பங்களாதேஷ்!
