இந்தியாவில் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் கொரோனா உச்சம் தொடும், இந்தியாவில் அப்போது 35 லட்சம் வரையில் கொரோனா நோயாளிகள் இருப்பார்கள் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தினந்தோறும் ஏறுமுகம் கண்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 3.32 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 24.28 லட்சம் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 2,263 பேர் 24 மணி நேரத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறையத்தொடங்குவதற்கு முன்னர் அடுத்த மாதம் மத்தியில் இன்னும் கூடுதலாக 10 லட்சம் அளவுக்கு உயரும் (35 லட்சம் வரையில்) என கான்பூர் ஐ.ஐ.டி., ஐதராபாத் ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
சூத்ரா என்று அழைக்கப்படுகிற எளிதில் பாதிக்கப்படுகிற, கண்டறியப்படாத, பாசிட்டிவ் என சோதித்து அறியப்பட்ட, அகற்றப்பட்ட அணுகுமுறை அடிப்படையில் இதை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இது பற்றி விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மகிந்திரா அகர்வால் (கான்பூர் ஐ.ஐ.டி. கம்ப்யூட்டர், என்ஜினீயரிங் பேராசிரியர்):-
அடுத்த மாதம் 11-ந்தேதியில் இருந்து 15-ந் தேதிக்குள் இந்தியாவில் 33 லட்சம் முதல் 35 லட்சம் வரையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருப்பார்கள் என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம். இது உச்சமாக இருக்கும். அதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு வேகமாக குறையும். அடுத்த மாத இறுதியில் வியக்கத்தக்க வகையில் பாதிப்பு குறைவதை பார்க்க முடியும்.
எங்களது சூத்ரா மாதிரியின் கணிப்பு தினசரி புதிய தொற்று தரவுகளுக்கு பொருந்தக்கூடியதாகும்.
தொற்றுநோயின் போக்கைக் கணிப்பதற்கு இந்த சூத்ரா மாதிரியில் 3 அம்சங்களை பயன்படுத்துகிறோம்.
முதல் அம்சம் பீட்டா அல்லது தொடர்பு விகிதம் ஆகும். இது ஒரு நபரால் தினமும் எத்தனை நபருக்கு கொரோனா பரவுகிறது என்பதை அளவிடும்.
அடுத்தது, சென்றடைதல். இது கொரோனாவுக்கு மக்கள் வெளிப்படும் அளவைக்குறிக்கிறது.
மற்றொன்று, எப்சிலான் ஆகும். இது கண்டறியப்பட்ட மற்றும் கண்டறியப்படாத கொரோனா நோயாளிகளின் விகிதம் ஆகும்.
கவுதம் மேனன் ( அசோகா பல்கலைக்கழகம், அரியானா):-
ஏப்ரல் மத்தியில் இருந்து மே மத்திக்குள் கொரோனா உச்சம் தொடும். ஒரு மிக துல்லியமான கணிப்பு, கொரோனா 5 நாளில் உச்ச நிலைக்கு போய் விடலாம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.