சுவாமி விவேகானந்தர் காட்டிய அதே வழியில்  புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் சிலையை திறந்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்த நூற்றாண்டு மேற்கு உலகிற்கானதாக இருந்தாலும்  அடுத்த நூற்றாண்டு இந்தியாவினுடையதாக இருக்கும் என அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் உரையாற்றியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

விவேகானந்தரின் கனவை நனவாக்க வேண்டிய பொறுப்பு  நம் ஒவ்வொருவருக்கும் உண்டு எனவும் பிரதமர் நரேந்திர மோடி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும்,  செயல்களும்,  நமக்கு எப்போதும் உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்கின்றன. அவரது சிந்தனைகளை படித்தால்,  மக்களிடம் தேசபக்தி அதிகரிக்கும் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

சுயசார்பை நோக்கி  நாடு இப்போது வேகமாக முன்னேறி வருகிறது. 130 கோடிக்கும் அதிகமான மக்களின் விருப்பப்படி சுயசார்பு இந்தியா விரைவில் உருவாகும் எனவும் மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.