மதுரை பந்தடி 5-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 41), இவர் மதுரையில் நகை கடைகளுக்கு நகைகளை செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வாணி (38). இவர்களுக்கு ஒரு வயதில் ஹாசினி 1 என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த 2 நாட்களாக விஜயகுமார் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் அவர்கள் வெளியூர் சென்றிருக்கலாம் என நினைத்திருந்தனர்.
இதற்கிடையில் இன்று விஜயகுமார் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் ஜன்னலை உடைத்து பார்த்தனர். அப்போது விஜய குமார், வாணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். தரையில் குழந்தை ஹாசினி பிணமாக கிடந்தாள்.
இதுகுறித்து தகவலறிந்த தெற்கு வாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விஜயகுமாருக்கு தொழிலுக்காக பலரிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் நகைகள் செய்து கொடுத்த நகை கடை உரிமையாளர்கள் பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டார். கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் வாழ்க்கையில் விரக்தியடைந்த கணவன் -மனைவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஒரு வயது மகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளனர். மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விஜயகுமார் குடும்பத்துடன் பந்தடி 5வது தெருவுக்கு குடி வந்து 15 நாட்கள்தான் ஆகின்றன. இதற்கு முன்பாக அவர்கள் வில்லாபுரம் பகுதியில் வசித்து வந்தனர்.
விஜயகுமார் கடன் சுமை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு யாராவது மிரட்டி தற்கொலை செய்ய வைத்தார்களா? என்கிற கோணத்தில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.