சென்னையை அடுத்த மேடவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 19). இவரது சொந்த ஊர் ஆரணி ஆகும். இவர், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காகவே மேடவாக்கத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தார்.


சரஸ்வதி, தனது சொந்த ஊரில் உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்குக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் சரஸ்வதி மீண்டும் சென்னையில் உள்ள அக்காள் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை சரஸ்வதி, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது அக்காள் மற்றும் குடும்பத்தினர் இதுபற்றி பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தூக்கில் தொங்கிய சரஸ்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சரஸ்வதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும், எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? எனவும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.