திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கீழப்பொய்கைப்பட்டியில் உள்ள ராசு என்பவரின் வேளாண் தோட்டத்தில் 6 ஆண் மயில்கள், 16 பெண் மயில்கள் என 22 மயில்கள் ஒரே நேரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை வனச்சரரர் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த 22 மயில்களின் உடல்களை கைப்பற்றி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் பன்னாங்கொம்பு, கீழையூர் கால்நடை மருத்துவர்கள் இறந்த மயில்களை பரிசோதனை செய்தனர்.

இதில் பறவைகளின் உடலில் வி‌ஷத்தன்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் என்ன வி‌ஷம் என்பதை உடனே உறுதி செய்ய இயலவில்லை. இதையடுத்து திருச்சி மண்டல தடயவியல் ஆய்வகத்துக்கு மயில்களின் ரத்த மாதிரியை நாளை அனுப்பி வைக்க உள்ளனர்.

இதற்கிடையே தோட்ட உரிமையாளர் ராசு மற்றும் அவரது மனைவி பொன்னம்மாள் (வயது 55) ஆகிய 2 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் வேட்டையாடுதல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை அறிந்த ராசு தலைமறைவாகி விட்டார். அவரது மனைவி பொன்னம்மாளை வனத்துறையினர் கைது செய்து மணப்பாறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்திரேட்டு பொன்னம்மாளை நிபந்தனை ஜாமீனில் விடுவித்தார். இதுபற்றி மாவட்ட வன அலுவலர் சுஜாதா கூறும்போது, தேசிய பறவையான மயில்களை கொலை செய்வது பெருங்குற்றமாகும். ஆனால் விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கு பூச்சிகொல்லி மருந்துகள் அடிக்கும் நிலையில் அதனை சாப்பிடும் வனவிலங்குகள் இறப்பதாக சொல்கிறார்கள்.

இதில் விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியும். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை அளிக்க வாய்ப்பு உள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

வனவிலங்குகள் ஆர்வலர்கள் கூறும்போது, மணப்பாறை பகுதியில் கடந்த 2 மாதங்களில் 40 மயில்கள் கொல்லப்பட்டுள்ளன. ஆனால் வனத்துறை வழக்குப்பதிவு செய்து யாரையும் கைது செய்யவில்லை. இந்த வி‌ஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.