திண்டுக்கல் மாவட்டம் கன்னிமேய்க்கான்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் அஜித் (வயது 18). பிளஸ்-2 முடித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகள் சிவரஞ்சனி (19). இவர் கரூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், உறவினர்களான அஜித்தும், சிவரஞ்சனியும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரியவரவே, சிவரஞ்சனியை விட வயது குறைவான அஜித்துக்கு திருமணம் செய்து வைப்பதை விரும்பாத பெண்ணின் உறவினர்கள், அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த இளம் காதல் ஜோடி நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாடி கிராமம் கத்தாளபட்டியில் உள்ள அரசமரத்தான் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், தங்களின் திருமணத்தை ஏற்று கொள்ளாமல் குடும்பத்தினர் பிரித்து விடுவார்களோ என்று அஞ்சிய திருமண காதல் ஜோடி திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து உள்ளனர்.
இதன்படி கத்தாளபட்டி காட்டுப்பகுதியில் சென்று இருவரும் விஷம் குடித்து விட்டு குடும்பத்தினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், அஜித் பரிதாபமாக உயிரிழந்தார். சிவரஞ்சனி உயிருக்கு போராடினார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் சிவரஞ்சனியை மீட்டு சிகிச்சைக்காக கரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.