இந்தியாவில் தாய்ப்பால் வங்கி திட்டம் 32 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் கேரள மாநிலத்தில் தாய்ப்பால் வங்கி இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தொடங்கப்பட உள்ளது.
எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் கொச்சி ரோட்டரி கிளப் உதவியுடன் ரூ.35 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. அதனை சுகாதாரத்துறை மந்திரி சைலஜா நாளை மறுநாள் (5-ந்தேதி) தொடங்கி வைக்கிறார்.
தாய்ப்பால் வங்கி குறித்து ரோட்டரி கிளப்பை சேர்ந்த டாக்டர் பால் கூறியதாவது:-
தாய்ப்பால் சேகரிப்பு, பாதுகாப்பு, தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்குவது ஆகியவை அரசின் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும். சேகரிக்கப்படும் பாலை ஒரு குழந்தைக்கு வழங்குவதற்கு முன், தேவைப்பட்டால் 6 மாதங்கள் வரை சேகரித்து வைக்க முடியும்.
முதல் கட்டமாக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு மட்டுமே பால் இலவசமாக வழங்கப்படும். பிற ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்குவது குறித்து பின்னர் திட்டமிடப்படும்.
எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் சேகரிக்கப்படும். புதிதாக பிறந்த பிற குழந்தைகளின் உயிரை காக்கும் உன்னதமான பணியில் பங்கேற்க தாய்மார்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.