தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிவிப்பில், “இதுவரை இல்லாதளவில் ஒரேநாளில் 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகளவாக ஆயிரத்து 493 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று ஆயிரத்து 438 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் இதுவரை 32 ஆயிரத்து 754 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன், தனியார் வைத்தியசாலைகளில் 16 பேர் உட்பட இன்று 53 பேர் வைரஸ் தொற்றால் மரணமடைந்துள்ளதுடன் தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 757 பேர் உயிரிழந்துள்ளனர்.