கோபிசெட்டிபாளையம் ஓடத்துறை பொம்மநாயக்கன்பாளையம் காமராஜர்நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவருடைய மனைவி கவுசல்யாதேவி (வயது 24). இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கவுசல்யாதேவி ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட கவுசல்யாதேவி கடந்த 18-ந் தேதியில் இருந்து விடுப்பில் உள்ளார். மேலும் அவர் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கவுசல்யாதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் ஆயுதப்படை போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.