இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த மீனவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்புக்கள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் கடந்த பத்து நாள்களாக ஊர்காவற்றுறை நீதிமன்றின் உத்தரவின் கீழ் தனிமைப்படுதப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில் அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டதுடன் ஏனையோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் மேலும் இருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் அங்கொடயிலிருந்து வருகைதந்து இரணைமடு வீதி சீரமைப்புப் பணிக்குழாமின் சாரதியாகக் கடமையாற்றுபவர் எனவும் மற்றையவர் வவுனியா பொலிஸ் நிலையப் பொலிஸ் உத்தியோகத்தர் என்றும் வைத்தியர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.