சீன எல்லை மட்டுமல்லாமல் பிற எல்லைகளிலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

லடாக் எல்லையில் இந்திய – சீன இராணுவப் படைகள் மோதல் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் இன்று (புதன்கிழமை) மீண்டும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் கலந்துகொண்டனர். அதேநேரம் தற்போதைய சூழல் குறித்தும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும் ராஜ்நாத் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில், சீன எல்லை மட்டுமல்லாமல் பிற எல்லைகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ராஜ்நாத்சிங் அறிவுறுத்தினார். மேலும் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்குமாறும் பாதுகாப்பை பலப்படுத்தி தேவையான இடங்களுக்கு கூடுதல் வீரர்களை அனுப்புமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை, வீரர்களின் மரணம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங், ‘வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு நாட்டு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். சீனாவின் அத்துமீறலால் இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தது வேதனையளிக்கிறது.

வீரர்களின் தியாகம், துணிச்சலை நாடு ஒருபோதும் மறக்காது. இந்திய வீரர்கள் தங்களின் உச்சபட்ச வீரத்தை வெளிப்படுத்தி நமது நிலப்பகுதியை காப்பாற்றியுள்ளனர்’ எனப் பதிவிட்டுள்ளார்.