ஜார்க்கண்ட் மாநிலம் ஜாஷ்பூரை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் மும்பையில் வசிக்கும் உறவினருடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட முடிவு செய்து அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் டெல்லியில் ரெயில் ஏறி மும்பை பாந்திரா டெர்மினலுக்கு வந்து சேர்ந்தார்.
அங்கிருந்து செல்லும் இடம் தெரியாமல் இருந்ததால் வெகுநேரமாக பாந்திரா டெர்மினல் ரெயில் நிலையத்தில் இருந்தார். இதனை கண்ட டிக்கெட் பரிசோதகர் அவரை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தார்.
இதன்பின்னர் இளம்பெண் கடந்த 26-ந்தேதி அங்கிருந்து புறப்பட்டு பன்வெல் ரெயில் நிலையம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து காந்தி கார்டன் செல்ல ஆட்டோவில் ஏறி சென்றார். இளம்பெண்ணை தனிமையில் வந்திருப்பதை அறிந்த ஆட்டோ டிரைவர் வாட்கர் நதி அருகே உள்ள மறைவான இடத்திற்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து அவரை மிரட்டி கற்பழித்து உள்ளார்.
இது பற்றி யாரிடமும் தெரிவித்தால் கல்லால் முகத்தை சிதைத்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்ற ஆட்டோ டிரைவர்களின் உதவியுடன் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சாலையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் அடையாளம் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பார்வாய் கிராமத்தில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவரை பிடித்து கைது செய்தனர். சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.