கெட்டதிலும் நல்லதாய், அனில் அவரது முதலாளியுடன் தினமும் எங்களுக்கு உணவு வழங்க வருவார்.
கொரோனா ஊரடங்கில் எண்ணற்ற திருமணங்கள் நடந்திருந்தாலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் நடந்த திருமணம் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. இது, மற்ற திருமணங்களைப் போல சொந்தபந்தங்களும் நண்பர்களும் சூழ நிகழவில்லை. மாறாக, சாலையில் வசிக்கும் ஒரு ஆதரவற்ற பெண்ணிற்கும், ஓட்டுநருக்கும் நிகழ்ந்த திருமணம். லாக்டௌனால், ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியபோது ஓட்டுநர் அனில், ஆதரவற்ற பெண்ணான நீலம் மீது காதல் வயப்பட்டுள்ளார். அனில், அவரது முதலாளியின் ஆணைப்படி உணவு விநியோகம் செய்தபோதே, இவர்களது காதல் கதை தொடங்கியுள்ளது.
ஒருநாள் நீலம், கான்பூரில் நீர் ஷீர் கிராஸிங் அருகில் உள்ள நடைபாதையில் அமர்ந்திருந்தபோதுதான், அனில் அவரை முதல்முறையாக சந்தித்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் நீலம் கூறியதாவது, "பல வருடங்களுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார். அதற்குப் பின் என் தாய் வாதநோய்க்கு உள்ளானார். இதனால் என் அண்ணனும் அவருடைய மனைவியும் என்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். வேறு போக்கிடமின்றி, வழியில் யாசகம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஊரடங்கு எங்கள் வாழ்க்கையை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. கெட்டதிலும் நல்லதாய், அனில் அவரது முதலாளியுடன் தினமும் எங்களுக்கு உணவு வழங்க வருவார். அப்போது அவர் என்னோடு பேசியபோது, எனது பரிதாப நிலையை அறிந்தார்.
அவர் என்னிடம் யாசகம் பெறுவதை விட்டுவிடும்படி அறிவுரை கூறினார். எங்களுக்குள் தொடர்பு தினமும் நீள, நட்பு மலர்ந்து அதுவே காதலாய் மாறியது. அனில் ஒருநாள் என்னிடம் காதலைக் கூற, நாங்கள் இருவரும் ஒரு ஆசிரமத்தில் சமூக இடைவெளியுடன் திருமணம் செய்ய முடிவெடுத்தோம்" என்றார்.
இவர்கள் திருமணம் சமூக இடைவெளியுடன் புத்தா ஆசிரமத்தில் நடைபெற்றது. அதில், நிறைய சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.