உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் லோனியின் அங்கூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் குமார் (23). இவர் அதேபகுதியில் உள்ள லோனி கோவிலுக்கு முன்பு பூக்கடை ஒன்று வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் பூக்கடை வைப்பது தொடர்பாக அஜய்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்த் ஷர்மா(21) என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு உள்ளது. இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டாலும் அருகில் இருந்தவர்கள் சமாதனம் செய்துவந்தனர்.
இந்நிலையில், அஜய் குமார் நகரின் பிரதான சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து வந்த கோவிந்த் ஷர்மா தனது நண்பர் அமித் குமாருடன் சேர்ந்து அவரை தாக்கியுள்ளார்.
சாலையில் வைத்தே தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அஜய் குமார் நிலைகுலைந்து கிழே விழுந்தார். எனினும் ஆத்திரம் தீராத இருவரும் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். சாலையில் சென்றவர்கள் கண்டும் காணாதது போல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் வீடியோ வைரலானது. இதையடுத்து வீடியோ அடிப்படையில் தாக்குதல் நடத்திய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாலையில் வைத்தே இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.