பேச்சுவார்த்தைகளின் போது பாமகவை விட அதிக தொகுதிகள் தரவேண்டும் எனக் கோரிவந்த தேமுதிகவிற்கு, பேச்சு வார்ததைகளின் இறுதியில், 15 தொகுதிகளை ஒதுக்குவதாக அதிமுக தெரிவித்தது. பா.ம.க.வுக்கு வழங்கியதுபோல, 23 தொகுதிகள் தாருங்கள் என்று தே.மு.தி.மு.க. இறங்கி வந்த போதும், அ.தி.மு.க. தரப்பில் 13 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் எனக் கூறப்பட்ட நிலையில், தே.மு.தி.க. அதிருப்தி அடைந்தது.அ.தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா? அல்லது தனித்து போட்டி முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க. தலைமை அவசர ஆலோசனை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுக்கப்பட்டதினால், எமது கட்சியின் மாவட்டசெயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இன்று 09.03.2021 திகதியிலிருந்து, அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவித்துள்ளார்