லண்டனில் மீண்டும் ஒரு சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த ஆண்டில் தொடர்ந்து சிறுவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. ஆட்டிஸ குறைபாடு கொண்ட மகனை வளர்க்க இயலாமல் கொலை செய்த தாய், தான் இறந்துவிட்டால் மகன் கஷ்டப்படுவான் என அவனை தண்ணீரில் அமிழ்த்திக் கொன்ற தாய், மன நல பாதிப்பால் குழந்தைகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை என பல துயர சம்பவங்கள் பிரித்தானியாவில் நிகழ்ந்துவிட்டன.
அந்த வரிசையில், இப்போது நான்கு வயது சிறுவன் ஒருவன் லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான்.
அந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் அந்த சிறுவனுக்கு அறிமுகமானவர் என்று மட்டுமே இப்போதைக்கு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் அந்த சிறுவனின் தாயா என்பது குறித்தோ, அவர்களது பெயர்கள் குறித்தோ பொலிசார் எந்த விவரமும் தெரிவிக்கவில்லை.
Plumsteadஇல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அந்த நான்கு வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான்.
அந்த 30 வயது பெண் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார், புதன்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
வியாழனன்றுதான் அந்த சிறுவனின் உடல் உடற்கூறு ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளது.